விருதுநகர் மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மாணவ, மாணவிகளுக்கான சைக்கிள் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பு நடந்த போட்டிக்கு மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ராமசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். வச்சக்காரப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் அன்னராஜ் முன்னிலை வகித்தார். இப்போட்டியை விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் எ.சி.ஆர்.வி.ரங்கராஜன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், 14 வயது வரையில் உள்ள மாணவர்களுக்கு 15 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 10 கி.மீ தூரமும், 15 மற்றும் 17 வயதுக்கு உள்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீ தூரமும், மாணவிகளுக்கு 15 கி.மீ தூரமும் என மூன்று பிரிவுகளில் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டது.
இதில், ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களை பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. அதேபோல், 4 வது இடம் முதல் 10 இடங்களை பெற்றவர்களுக்கு தகுதி சான்றிதழ்களையும் மாவட்ட கைப்பந்து கழகத்தின் தலைவர் எ.சி.ஆர்.வி.ரங்கராஜன் வழங்கினார்.
இந்தப் போட்டியில் மாவட்டம் முழுவதும் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 180 பேர் வரையில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.